கிருஷ்ணகிரி அணை நீர்மட்டம் 42 அடியாக உயர்ந்த நிலையில், அணை நீர்தேக்கப்பகுதியில் தண்ணீர் கடல்போல காட்சியளிக்கிறது. 
Regional02

கிருஷ்ணகிரி அணை நீர்மட்டம் 42 அடியாக உயர்வு :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து உள்ள நிலையில் அணை நீர்மட்டம் நேற்று 42 அடியாக உயர்ந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், ஆழியாளம், கொலுசுமடுவு, எண்ணேகொல்புதூர் உள்ளிட்ட 11 தடுப்பு அணைகளை கடந்து, கிருஷ்ணகிரி அணைக்கு வருகிறது. கெலவரப்பள்ளி அணையில் திறக்கப்படும் நீரின் அளவும், பரவலாக பெய்யும் மழையை பொறுத்தும் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும்.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக அணைக்கு நீர்வரத்து தொடங்கியுள்ள நிலையில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 240 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 251 கனஅடியானது. நேற்று முன்தினம் 41.70 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 42 அடியானது.

“அணை நீர்மட்டம் 48 அடிக்கு மேல் உயரும்போது, அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்” என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதனிடையில், நேற்று கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

SCROLL FOR NEXT