மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை தாலுகா மருத்துவமனைகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் மொடக் குறிச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி அலுவலகத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து முழு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட தொகுப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட பாஜக தலைவர் சிவசுப்பிரமணியம், மொடக் குறிச்சி ஒன்றியத் தலைவர் கணபதி, வழக்கறிஞர் பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் பாஜக எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
மொடக்குறிச்சி தொகுதியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில், கரூவூல அலுவலகம், நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கிளைச்சிறை மற்றும் தரம் உயர்த்தப்பட்ட மாநகர துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களை, அனைத்து வசதிகளுடன் கூடிய தாலுகா மருத்துவமனைகளாக தரம் உயர்த்திடவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.