கரோனா உயிரிழப்புக்கு வழங்கப்படும் சான்றிதழ் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிகாட்டியதை சுகாதாரத்துறை அமைச்சர் புரிந்து கொள்ளவில்லை என சேலம் தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ பாலசுப்ரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி இறந்தவர்களுக்கு, கரோனா இறப்பு என சான்றிதழ் வழங்காமல், நிமோனியா, கார்டியாக் அரஸ்ட் போன்றவற்றால் உயிரிழப்பு ஏற்பட்டது என சான்றிதழ் வழங்கப்படுகிறது.எனவே, உண்மையான காரணத்தை குறிப்பிட்டு, இறப்பு சான்றிதழ் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறியதை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சரியாக புரிந்து கொள்ளவில்லை.
மாறாக, ஐசிஎம்ஆர் விதிகளை கடைபிடிப்பதாகவும், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எம்பி வசந்தகுமார் ஆகியோரின் மரணங்களை அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார். திமுக முன்னாள் எம்எல்ஏ ஜெ.அன்பழகன், அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோரின் மரணம் பற்றி அமைச்சர் குறிப்பிடாதது ஏன்?
கரோனா தொற்று முற்றிலும் நீங்கிய நிலையில், இணை நோயால் இறந்துவிடுகின்றவர்களுக்கும், கரோனா வார்டில் சிகிச்சை பெறும்போது, ஓரிரு நாட்களில் மரணம் ஏற்படும் நோயாளிகளுக்கும் வித்தியாசம்உள்ளது. எனவே, இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கும்போது, இணை நோயால் இறப்பு ஏற்பட்டதாக சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதனால், அவர்களது குடும்பங்களுக்கு அரசு நிவாரண உதவி கிடைப்பதில்லை.
பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் அரசு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சித் தலைவரின் விருப்பம். எனவே, கரோனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு இனியாவது சரியான இறப்பு சான்றிதழை அரசு வழங்கி, பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்து ள்ளார்.