தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தபுரம் கீழத் தெருவை சேர்ந்த முருகன் மகன் தங்கதுரை (29). கூலித் தொழிலாளியான இவர், கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணியை சேர்ந்த ராஜு மகள் வெண்ணிலா( 21) என்பவரை காதலித்து கடந்த 10.02.2019-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்பது மாத ஆண் குழந்தை உள்ளது. வெண்ணிலா மீண்டும் கருவுற்றிருந்தார். இந்நிலையில் குடும்பச் செலவுக்கு தங்கதுரை பணம் கொடுக்காததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் 5-ம் தேதிவெண்ணிலா வீட்டில் உள்ள கட்டிலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸார் சந்தேக மரணம் எனவழக்கு பதிவு செய்ந்தனர். திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆனதால் திருச்செந்தூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். வெண்ணிலா கீழே விழுந்ததில் அடிபட்டு இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெண்ணிலாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகஅவரது தந்தை ராஜு சாத்தான்குளம் போலீஸில் புகார் தெரிவித்தார். போலீஸார் தீவிர விசாரணைநடத்தியதில் வெண்ணிலாவை தங்கதுரை கீழே தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்தனர். வீட்டில் மறைந்திருந்த தங்கதுரையை கடந்த 2 நாட்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் பெர்னாடு சேவியர் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.