மீன்பிடி தடைக்காலம் முடிவடைய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மீன்பிடி தடைக்காலம் வரும் 14-ம் தேதியோடு முடிவடைவதால், இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் மீனவர்கள் இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை பொறுத்தவரை மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீன்பாடு சரியாக இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டு வந்ததால், தடைக்காலம் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே மீனவர்கள் படகுகளை கரையில் நிறுத்திவிட்டனர். தற்போது சுமார் 3 மாதங்களுக்கு பிறகு தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
அரசுக்கு கோரிக்கை
அதுபோல இந்த ஆண்டு மீன்பிடித் தடைக்காலம் தொடங்கு வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே பெரும்பாலான படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் கட்டப்பட்டுவிட்டன. படகுகள் மற்றும் வலைகளை ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவு செய்து சீரமைத்துள்ளோம். தற்போது 3 மாதங்களுக்கு பிறகு கடலுக்கு செல்லவுள்ளோம்.
தமிழக அரசு சார்பில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா ஊரடங்கு காரணமாக மீன்பிடி தொழில் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தொகையை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்” என்றனர்.