ஓசூரில் நடமாடும் காய்கறிகள் வாகன விற்பனை குறித்து வேளாண் வணிகத்துறை அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் இயங்கி வரும் நடமாடும் காய்கறி மற்றும் பழ வகைகள் வாகன விற்பனையை வேளாண் வணிகத்துறை யின் கீழ் இயங்கும் உழவர் சந்தையின் நிர்வாக அலுவலர் சுமிதா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது: ஓசூர் மாநகராட்சியில் ஒரு வார்டுக்கு 2 வாகனம் என 90 வாகனங்களில் உழவர் சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள விவசாயிகள் மூலமாக காய்கறி மற்றும் பழவகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் காய்கறிகள் 45 வாகனங்களிலும், பழ வகைகள் 45 வாகனங்களிலும் என மொத்தம் 90 வாகனங்களின் முகப்பில் ஒலிபெருக்கி கட்டப்பட்டுள்ளது. அதன் மூலமாக விற்பனைக்கு உள்ள காய்கறி மற்றும் பழங்களின் பெயர்களை அறிவித்தபடி விற்பனை நடைபெறுகிறது.
மேலும், நடமாடும் வாகன விற்பனையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கட்டாயம் முகக்கவசம் அணியவும், கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும். தவறாமல் சமூக இடை வெளியை கடைப்பிடிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விலையில் தான் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் என்றார். ஆய்வின்போது உதவி வேளாண்மை அலுவலர் சிவானந்தம் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.