Regional02

அனுமதியின்றி இயங்கிய நிறுவனங்களுக்கு ‘சீல்’ :

செய்திப்பிரிவு

தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் அருகே அனுமதியின்றி இயங்கிய நிறுவனங்களுக்கு அதிகாரிகள் நேற்று ‘சீல்’ வைத்தனர்.

திருப்பூர் தெற்கு வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிறுவனங்கள் உரிய அனுமதியின்றி இயங்கி வருவதாக கிடைத்த தகவலின்பேரில் கோட்டாட்சியர் ஜெகநாதன், தெற்கு வட்டாட்சியர் சுந்தரம் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். வீரபாண்டி இடுவம் பாளையம் சாலையில் தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனம், கரோனாதொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உரிய அனுமதியின்றி இயங்குவது தெரியவந்தது. இதையடுத்து வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி முன்னிலையில் நிறுவனத்தை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

இதேபோல, திருப்பூர் கருவம்பாளையம் நியாயவிலை கடை அருகே இயங்கிய நகைப்பட்டறைக்கும் 'சீல்' வைக்கப்பட்டது. மேலும், பாலாஜி நகர் 2-வது தெருவில் இயங்கிய தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனத்துக்குரூ.1000 அபராதம் விதித்து, வருவாய் அலுவலர் தலைமையில் நிறுவனத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT