கரோனா ஊரடங்கை பயன்படுத்தி கர்நாடகாவில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்த கும்பலை சேர்ந்த 3 பேரை தூத்துக்குடிமாவட்ட போலீஸார் நேற்று கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 2,352 மதுபாட்டில்கள்,ரூ.15 லட்சம், கன்டெய்னர் லாரி மற்றும் கார்ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி எஸ்பி எஸ்.ஜெயக்குமார் உத்தரவின் பேரில், ஏடிஎஸ்பி கார்த்திகேயன் மேற்பார்வையில் மதுவிலக்கு டிஎஸ்பி பாலாஜி தலைமையில் போலீஸார் நேற்று காலை தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பிரதான சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி மற்றும் காரை மறித்து சோதனைசெய்தனர். அவைகளில் 49 அட்டைப் பெட்டிகளில் 180 மில்லி அளவு கொண்ட 480 மதுபாட்டில்கள் மற்றும் அதே அளவு கொண்ட 1,872 மதுபான பாக்கெட்டுகள்,ரொக்கப் பணம் ரூ.14,51,850 இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மது பாட்டில்கள், பணம், லாரி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக லாரி மற்றும் காரில்வந்த விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்த சிவராமன் (40), திருப்பூர் படியூரைச் சேர்ந்த மெய்யழகன் (38) மற்றும் திருப்பூர் மன்னரை பாளையக்காடு பகுதியைச் சேர்ந்த பூபாலன் (35) ஆகியோரைக் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் 3 பேரும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி, அவற்றை தமிழ்நாட்டில் கும்பகோணம், புதுக்கோட்டை மாவட்டம், மதுரை, மேலூர் மற்றும்நாங்குநேரி உள்ளிட்ட பல இடங்களில் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுபோல்தூத்துக்குடி மாவட்டத்திலும் விற்பனை செய்ய திட்டமிட்டு நாங்குநேரியில் இருந்துவந்த போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுவிலக்கு காவல் நிலைய போலீஸாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.
தமிழ்நாட்டில் கும்பகோணம், புதுக்கோட்டை மாவட்டம், மதுரை, மேலூர் மற்றும் நாங்குநேரி உட்ளிட்ட பல இடங்களில் மது விற்பனை செய்தது தெரிய வந்தது.