திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் அலுவலகம் முன், பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் நேற்று கோரிக்கை அட்டை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2018- 2021 பருவ மருத்துவ பட்ட மேற்படிப்பு காலம் மே 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இருப்பினும், ஒரு மாத காலம் கூடுதலாக பணியாற்றுமாறு அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதைக் கண்டித்து பட்ட மேற்படிப்பு மாணவர்கள் நேற்று இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறியது: பட்ட மேற்படிப்பு காலத்தை நீட்டிப்பு செய்யாமல், அனைத்து அரசு சாரா பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களையும் முதுநிலை குடியிருப்பு மருத்துவர்களாக அல்லது அரசு உதவி மருத்துவராக கலந்தாய்வு மூலம் பணி நியமனம் செய்ய வேண்டும். இந்த ஒரு மாத பயிற்சிக் காலத்தை முதுநிலை குடியிருப்பு பணிக் காலத்தில் சேர்த்து, அதற்கேற்ப ஊதியத் தொகை மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும். கரோனா காலத்தில் பணியாற்றும் மருத்துவர்களின் சேவையைக் கருத்தில் கொண்டு 2 ஆண்டு கட்டாய சேவைக் காலத்தை ஓராண்டாக குறைக்க வேண்டும் என்றனர்.
அப்போது, கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக மருத்துவமனை முதல்வர் கே.வனிதா கூறியதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட் டத்தை விலக்கிக் கொண்டனர்.