தமிழகத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தடுப்பூசி போட ஏராளமானோர் குவிந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் என, மாவட்டம் முழுவதும் 88 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டும் தடுப்பூசி போடப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போடுகின்றனர். மாவட்டத்தில் தினமும் சராசரியாக 9,500 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. நேற்றுமுன்தினம் வரை 1,17,835 பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். இவர்களில் 28,374 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.
இந்நிலையில், “தமிழகத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு போடுவதற்கான தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. அதற்குள் மத்திய அரசு தடுப்பூசிகளை அனுப்பி வைக்கா விட்டால், ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை தடுப்பூசி போட முடியாது” என, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கரோனா தடுப்பூசி போடுவதற்கு மக்கள் அதிகளவில் தடுப்பூசி மையங்களில் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டனர். குறிப்பாக தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள தடுப்பூசி மையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது.
2 நாட்களுக்கு போடுவதற்கான தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. என, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.