Regional02

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் : திருப்பூர் மாவட்ட ஆய்வுக் கூட்டத்தில் முடிவு

செய்திப்பிரிவு

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மை உற்பத்தி செயலருமான சி.சமயமூர்த்தி தலைமை வகித்தார். ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், நகர ஊரமைப்பு இயக்குநர் பி.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கண்காணிப்பு அலுவலர் சி.சமயமூர்த்தி பேசும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கரோனா தொற்று பரவுவதை தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

மேலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், அந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மூலமாக அமைக்கப்பட உள்ள ஆலோசனை மையங்களில் தங்களுக்கு தேவையான ஆலோசனைகளை பெறலாம்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் அதிகளவு காய்ச்சல் மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது. சளி, காய்ச்சல் போன்ற நோய் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய 100 வீட்டுக்கு ஒரு தன்னார்வலர் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டு, கரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள், கரோனா பரிசோதனை மையங்கள், ஆக்சிஜன் அளவுகளை அதிகப்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கும் தடுப்பூசிகளை பொதுமக்கள் செலுத்திக்கொண்டு, தங்களை நோய் தொற்றில் இருந்து முழுமையாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT