திருநெல்வேலியில் ஊரடங்கு விதிகளை மீறி தேவையின்றி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு கட்டாய கரோனா பரிசோதனை மேற்கொள்ள போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.
கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், மக்களில் சிலர் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தேவையின்றி வெளியில் சுற்றுகின்றனர்.
கடந்த சில நாட்களாக அவர்களை போலீஸார் எச்சரித்து வந்தனர். சிலரது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், சிலர் முறையான அனுமதியின்றி வாகனங்களில் வெளியில் சுற்றியதால், அவர்களுக்கு கட்டாய கரோனா பரிசோதனை மேற்கொள்ள திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் தலைமையிலான போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். ஏராளமானோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.