Regional01

கரோனா ஊரடங்கையொட்டி கரூர் மாவட்டத்தில் - சிறப்பு உணவளிக்கும் திட்டம் இன்று தொடக்கம் : மின் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்

செய்திப்பிரிவு

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 60 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள், ஆக்சிஜன் ப்ளோ மீட்டர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் விழா ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கரூர் ஓபிஜி பவர் ஜெனரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், வி.செந்தில்பாலாஜி அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில், உபகரணங்களை ஆட்சியரிடம் வழங்கிய மின் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறியது:

கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை (இன்று) முதல் சிறப்பு உணவளிக்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.

இதன்படி, ஊரடங்கு முடிவ டையும் வரை மாவட்டத்தில் எந்தப் பகுதியில் உள்ளவருக்கு உணவு தேவை என்றாலும் 94987 47644, 94987 47699 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொண்டு தெரிவித்தால், உணவு விநியோகிக்கப்படும். காலை உணவுக்கு முந்தைய நாள் இரவு 8 மணிக்குள்ளும், மதிய உணவுக்கு அன்று காலை 8 மணிக்குள்ளும், இரவு உணவுக்கு அன்று மதியம் 2 மணிக்குள்ளும் தெரிவிக்க வேண்டும். ஊரடங்கு முடியும் வரை 3 வேளையும் உணவு தேவை என்றால், முதல் அழைப்பிலேயே தெரிவிக்கலாம் என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் இரா.முத்துச்செல்வன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT