Regional01

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் - ஓலைச்சுவடிகளைக் கணினியில் பதிவேற்றும் பணி :

செய்திப்பிரிவு

ரங்கம் ரங்கநாதர் கோயில் அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால ஓலைச்சுவடிகளைக் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறை ஆளுகைக்குட்பட்ட கோயில்களில், நடைமுறையில் உள்ள பல்வேறு பதிவேடுகள், கோயிலின் சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் பார்வையிடும் வகையில், புவிசார் குறியீடு செய்து இணையத்தில் வெளியிட வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.

அந்த வகையில், ரங்கம் ரங்கநாதர் கோயில் அருங்காட்சியகத்தில், அந்தக் கோயில் மட்டுமின்றி அதன் உப கோயில்களான ரங்கம் காட்டழகிய சிங்கர் கோயில், உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில், அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோயில், அன்பில் பிரம்மபுரீஸ்வரர் கோயில், அன்பில் மாரியம்மன் கோயில், திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில் ஆகியவற்றின் ஆவணங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலை யில், கோயில் அருங்காட்சியகத்தில் உள்ள அனைத்து ஓலைச்சுவடிகளையும் கேமராவில் ஒளிப்பதிவு செய்து, கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: ரங்கம் ரங்கநாதர் கோயில், அதன் உப கோயில்கள் ஆகியவற்றின் அனைத்து சொத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.சுந்தரகாண்டம், பாகவதம், பாகவதம், பெரியாழ்வார் திருமொழி வியாக்கியானம், துலா காவிரி புராணம் ஆகிய 5 தலைப்புகளில், தலா 250 ஓலைச்சுவடிகள் 6 கட்டுகளாக உள்ளன. ஓலைச்சுவடிகள் பெரும்பாலானவை பழங்கால தமிழ் எழுத்துகளிலும், சில தெலுங்கு மொழியிலும் பொறிக்கப்பட்டுள்ளன. ஓலைச்சுவடிகள் மிகவும் பழமையானவை என்பதால் அவை சேதமடைந்துவிடாமல் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.

SCROLL FOR NEXT