ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கின் போது வெளியில் சுற்றிய 1200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, ரூ.5.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் தளர்வில்லாத முழு ஊரடங்கின் போது வாகனப்போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் 50-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளை அமைத்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர். இ – பதிவு மேற்கொள்ளாதவர்கள், மருத்துவம் போன்ற அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக நேற்று முன்தினம் ஒரே நாளில், ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 5.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றியதாக, மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 1200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கை மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவது தொடரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.