வள்ளியூரில் திருச்செந்தூர் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. ரயில்கள் செல்லும்போது வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனை தவிக்கும் வகையில், வாகனங்கள் தடையில்லாமல் செல்ல வசதியாக, ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2018-ல் தொடங்கியது. ரூ.13.36 கோடி செலவில் தொடங்கப்பட்ட இப்பணி மந்தமாக நடந்து வந்தது. இதனால், வள்ளியூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலுள்ள 100-க்கும் அதிகமான கிராம மக்கள் பாதிப்படைந்தனர்.
சுரங்கச்சாலை பணி நடந்து வருவதால் பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்களும் 8 கி.மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால், வள்ளியூர்- ராதாபுரம் சாலையில் உள்ள வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.
இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவிடம் கோரிக்கை விடுத்தனர். சட்டப்பேரவைத் தலைவர் கடந்த 17-ம் தேதி இப்பணிகளை ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்து, ஒரு வாரத்தில் வாகனப் போக்குவரத்துக்கு பாதையை திறந்துவிட வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
சட்டப்பேரவைத் தலைவர் நேற்று மீண்டும் ஆய்வு மேற்கொண் டார். சுரங்க சாலை பாதை இன்று முதல் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுகிறது.