கரோனா தொற்றுக்கு பெற்றோர் ஆளாகும்போது, பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கப்படுகிறது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக் கப்பட்டாலோ அல்லது சிகிச்சை பலனின்றி இறப்பு நேரிட்டாலோ, அவர்களின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உறுதி செய்யும் விதமாக அரசு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. அதன்படி 18 வயதிற் குட்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழங்க பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கென தனித்தனி பராமரிப்பு நிறுவனங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு உணவுடன் கூடிய தங்குமிடம், உளவியல் சார்ந்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது. மேலும் மருத்துவ உதவி வழங்க பரிந்துரையும், தேவையான கல்வியும் வழங்கப்படுகிறது. இதுதொடர்பான விவரங்களுக்கு மற்றும் குழந்தைகள் சார்ந்த உதவிகளுக்கு, குழந்தைகளுக்கான இலவச அரசு உதவி எண் 1098 அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண் 8, டிஆர்டிஏ., வணிக வளாகம், கிருஷ்ணகிரி - 635002 என்கிற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.