கிருஷ்ணகிரி அகத்தீஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் மூலிகை கஞ்சி விநியோகம் செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி அடுத்த எம்.சி.பள்ளி கிராமத்தில் ஆனந்தவள்ளி அம்பிகா சமேத அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் நிர்வாகம் சார்பில், கடந்தாண்டு கரோனா தொற்று பரவலின்போது பொதுமக்களுக்கு மூலிகைக் கஞ்சி வழங்கப்பட்டது. தற்போது, கரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், கோயில் நிர்வாகம் சார்பில் மீண்டும் மூலிகை கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது.
மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, மஞ்சள், கருஞ்சீரகம், இஞ்சி, பூண்டு, சித்தரத்தை, பெருங்காயம், மல்லி, புதினா இலைகள், குருணை அரிசி, வெந்தயம், ஓமம், சோம்பு, உப்பு ஆகிவைகளை சேர்த்து மூலிகை கஞ்சி தயாரிக்கப்படுகிறது.
இக்கஞ்சி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை முன்பும், அரசு ஆண்கள் கலைக் கல்லூரி பகுதியிலும் தினமும் காலை 7 மணி முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக கோயில் நிர்வாகிகள் கூறும்போது, “மூலிகை கஞ்சியை பருகும்போது பசி அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு திறனும் அதிகரிக்கும். ரத்த அழுத்தம், குடல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினை களும் சீராகும். தினமும் 150 பேருக்கு வழங்கி வருகிறோம்” என்றனர்.