தஞ்சாவூர் மாவட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசி கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால், 2-வது தவணை போட முடியாமல், பொதுமக்கள் கடந்த 2 வாரங்களாக தவித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கரோனா பரவல் அதிகரிக்கும் நிலையிலும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வும் அதிகளவில் மக்கள் மத்தியில் சென்றடைந்ததால், தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், தடுப்பூசியின் தேவையும் அதிகரித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், இதுவரை 1,57,000 பேர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
தற்போது, மாவட்டத்தில் கோவிஷீல்டு ஊசிகள் மட்டுமே போடப்பட்டு வருகின்றன. கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘கோவாக்சின் முதல் தவணை செலுத்திக்கொண்ட நிலையில், 2-வது தவணை செலுத்த குறிப்பிட்ட நாட்களை விட, இரு வாரங்களுக்கும் மேலாகிவிட்டது. அரசு மருத்துவமனைகளில் கோவாக்சின் தடுப்பூசி இல்லை என திருப்பி அனுப்பி விடுகின்றனர். எப்போது வரும் எனக் கேட்டாலும், முறையான பதில் அளிப்பது இல்லை.
முதல் தவணை செலுத்திக் கொண்ட நிலையில், 2-வது தவணையை காலதாமதமாக செலுத் திக் கொண்டால், உடலில் பக்க விளைவுகள் ஏற்படுமோ என அச்சமாக உள்ளது’’ என்றனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் (பொறுப்பு) நமச்சிவாயம் கூறியது: தற்போது மாவட்டத்தில் 77 அரசு ஆரம்ப, வட்டார, துணை சுகாதார நிலையங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 5 ஆயிரம் தடுப்பூசி வரை இருப்புள்ளது. கோவாக்சின் தடுப்பூசி இன்னும் 2 நாட்களில் வந்து விடும். பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. ஊசி வந்த பிறகு முறையாக அனைவருக்கும் போடப்படும் என்றார்.