சேலம் மாவட்டத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரிப்பு தொடர்பாக திட்டமிட்டு, பற்றாக்குறையின்றி செயல்பட வேண்டும் என அரசு கூடுதல் முதன்மை செயலர் முகமது நசிமுதீன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு கூடுதல் முதன்மை செயலருமான முகமது நசிமுதீன் சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு, முன்னெச்சரிக்கைப் பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் ஆத்தூர் அரசு மருத்துவமனை, பெத்தநாயக்கன் பாளையத்தில் கரோனா தற்காலிக சிகிச்சை மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் மையம், கரோனா தடுப்பூசி செலுத்தும் இடம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, கூடுதல் வசதிகள் ஏற்படுத்துவது , தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவமனை முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சேலம் அரசு மருத்துவமனைக்கு தனியாரிடம் இருந்து தேவையான அளவு ஆக்சிஜன் பெறப்பட்டு வருகிறது. தற்போது உள்ள நோயாளிகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, ஆட்சியர் ராமன் முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு தலைமை வகித்து முகமது நசிமுதீன் பேசியதாவது:
கரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண் டும். அவர்களுக்கான உணவுகள் தரமாகவும், அட்டவணையில் உள்ளபடியும் வழங்க வேண்டும். மாவட்டத்துக்கு தேவையான ஆக்சிஜன் இருப்பில் உள்ளதை கண்காணித்து வர வேண்டும். கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, தேவைப்படும் ஆக்சிஜனை முன்கூட்டியே திட்டமிட்டு பெற வேண் டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார், எஸ்பி தீபா காணிகர், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.