Regional03

மீன்வளப் பல்கலைக்கழகத்தில் - 6 மாத சான்றிதழ் படிப்புகள் : மே 14 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்வி மூலம் நன்னீர் மீன்வளர்ப்பு, அலங்கார மீன்வளர்ப்பு மற்றும் மதிப்பூட்டிய மீன்பொருட்கள் தயாரிப்பு பற்றிய ஆறு மாத கால சான்றிதழ் படிப்புகள் நடத்தப்பட உள்ளன.

நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு படிப்பானது தூத்துக்குடி, பொன்னேரி மற்றும் தஞ்சாவூரிலும், அலங்கார மீன்வளர்ப்பு பற்றிய சான்றிதழ் படிப்பானது மாதவரம் மற்றும் பவானிசாகரிலும், மதிப்பூட்டிய மீன்பொருட்கள் தயாரிப்புபடிப்பானது தலைஞாயிறு, தூத்துக்குடி மற்றும் பொன்னேரியிலும் நடத்தப்பட உள்ளன.

இதற்கான விண்ணப்பங்களை https://www.tnjfu.ac.in/directorates/othersdir/doe/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்படிப்புகளுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இப்படிப்புகளுக்கான பயிற்சி கட்டணம் ரூ.3,000.

விருப்பமுள்ளவர்கள் பயிற்சி கட்டணத்தை The DEE, TNJFU, Nagapattinam என்ற பெயரில் ஏதேனும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், நாகப்பட்டினத்தில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுத்து,பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், வங்கி வரைவோலை (அசல்), பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (நகல்), ஆதார் அட்டை (நகல்) மற்றும் சமீபத்திய புகைப்படம் ஆகியவற்றை விரிவாக்க கல்விஇயக்குநர், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், வெட்டாறு நதிக்கரை வளாகம், நாகப்பட்டினம் - 611002 என்ற முகவரிக்கு 14.05.2021 அன்று மாலை 5.45 மணிக்கு முன்னர்நேரிலோ அல்லது தபாலிலோ கிடைக்கும்படி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT