ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்ற சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
சென்னை காவல் ஆணை யராக பொறுப்புவகித்த மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று காலை பதவியேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனாவுக்கு எதிராகப் போராடும் முன்களப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காவல் துறையினர் சிறப்பாக செயல்படுகிறார்கள். தமிழக முதல்வரின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையிலும், சிறப்பாக ஆட்சிபுரியும் வகையிலும் நாங்கள் செயல்படுவோம்.
சென்னை காவல் துறை, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க முன்னுரிமை கொடுத்து செயல்படும். ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் இரு வார முழு ஊரடங்கில், அரசு வழிகாட்டி நெறிமுறைகளைப் பொதுமக்கள் தவறாது பின்பற்ற வேண்டும். கரோனா தொற்றால் காவல் துறையினர் பாதிக்கப்படுவது குறித்து என் கவனத்துக்கு வந்துள்ளது. காவல் துறையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதையும் தாண்டி, புதிய வழிகாட்டுதல்களை செயல்படுத்த உள்ளோம்.
அதன்படி, காவல் துறையினருக்கு சிறிய அளவிலான அறிகுறி தெரிந்தாலும், உடனடியாக அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். தொற்று உறுதியானால் தனிமைப்படுத்தப்பட்டு வீடு அல்லது மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும். தனிமையில் இருக்கும் காவல் துறையினருக்கு தைரியம் அளிக்கும் வகையில், அவரிடம் தொடர்ந்து பேசுவோம். இதுவரை சுமார் 3 ஆயிரம் காவல் துறையினர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, முழு பாதுகாப்பு அளிக்கப்படும். கஞ்சா, போதைப் பொருள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊரடங்கில் பொதுமக்கள் வெளியில் வருவார்கள். எனினும், அவர்களிடம் கடுமையாக நடக்க முடியாது. எனவே, அவர்களுக்கு தக்க அறிவுரைகூறி, வெளியில் வருவதைக் கட்டுப்படுத்துவோம். ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கத் தடையில்லை. ‘ஆன்லைன்’ மூலமாகவும் தாராளமாக புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
ஊரடங்கால் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, முழு பாதுகாப்பு அளிக்கப்படும். கஞ்சா, போதைப் பொருள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.