வடமாநிலங்களில் கரோனா பரவலால் துணிகளை அனுப்ப முடியாத நிலை மற்றும் தமிழகத்தில் புதிய கட்டுப் பாடுகள் அமலானதால் தொழில் பாதிப்பு காரணமாக வரும் 20-ம் தேதி வரை விசைத்தறியாளர்கள் தங்களது உற்பத்தியை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளனர்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம், சோலார், அசோகபுரம் உள்ளிட்ட பகுதி களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி செய்யப்பட்டு, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி, மேற்கு வங்காளம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
கரோனா பரவல் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து ஆர்டர் கிடைப்பது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 நாட்களாக வெளி மாநிலங் களுக்கு அனுப்ப முடியாமல் ரூ.200 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன. இந் நிலையில் தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத் தும் வகையில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், விசைத்தறி உற்பத்தி 50 சதவீதமாக குறைந்தது. இதனால் நாளொன்றுக்கு 24 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தியாகும் இடத்தில், 12 லட்சம் மீட்டர் துணிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், வரும் 20-ம் தேதி வரை விசைத்தறியாளர்கள் தங்களது முழு உற்பத்தியையும் நிறுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று முதல் விசைத்தறிகள் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் சுரேஷ் கூறியதாவது:
கரோனா தொற்றில் இருந்து எங்கள் குடும்ப உறுப்பினர்களை காக்கவும், தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் நலன் காக்கவும் வரும் 20-ம் தேதி வரை முழுவதுமாக உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளோம். மேலும் வட மாநிலங்களில் தற்போது தொற்று அதிகரித்துள்ள காரணத்தாலும், துணிகள் தேக்கமடைந்து வருவதும் உற்பத்தி நிறுத்தத்திற்கு காரணம். முழு உற்பத்தி நிறுத்தம் மூலம் நாளொன்றுக்கு ரூ. 7 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும், என்றார்.