தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி. செந்தில் ராஜ் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, நகர்நல மையம், ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படுவோர் குறித்த விவரம்மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்படவில்லை என தொடர்ந்து புகார் வருகிறது.
எனவே, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகள், தொற்று கண்டறியப்படுவோர் விவரங்களை உடனடியாக ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு 9940211677 என்ற செல்போன் எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவிக்க வேண்டும். இதை மீறும் தனியார்நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.