மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக் குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருக்கும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க அனுமதியளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், ஏழு தமிழர் விடுதலைக் கட்சி நிர்வாகி காந்தி உள்ளிட்ட 7 பேர் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர். அதில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக் கூறுகளை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். அதுவரை ஆலையைத் திறக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.