பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதி முத்துமனோ (27) கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் நேற்று 2-வது நாளாக விசாரணை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளத்தை சேர்ந்த பாவநாசம் மகன் முத்துமனோ. பணகுடியில் இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட அவரை கடந்த வாரம் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு போலீஸார் அழைத்து வந்தனர்.
அங்கு ஏற்பட்ட மோதலில் முத்துமனோ அடித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸார் வழக்கு பதிந்து, சிறையிலிருக்கும் 7 பேரை கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிறை அலுவலர்கள், காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் சிறைத்துறை அதிகாரிகள், காவலர்களை சேர்க்க வேண்டும். உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முத்துமனோவின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், வாகைகுளம் கிராமத்தினரும் நேற்று 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே சிறைக்குள் கொலை நடைபெற்ற பகுதிகளை சிபிசிஐடி போலீஸார் நேற்று 2-வது நாளாக பார்வையிட்டனர். மேலும் கைதிகளிடம் 2-வது நாளாக விசாரணை மேற் கொள்ளப்பட்டது.