தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் 54 மற்றும் 56-வது அணிகள் சார்பில், முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியில் கரோனா தொற்று பரவாமல் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் து.நாகராஜன் தலைமை வகித்தார். மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் செண்பகச்செல்வன் முன்னிலை வகித்தார். மாணவ, மாணவியர் அந்தப் பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குச் சென்று கபசுர குடிநீர் வழங்கினர்.
கரோனா தொற்று பரவும் விதம், முகக்கவசம் அணிதலின் அவசியம், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் குறித்து கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஆ.தேவராஜ், பா.பொன்னுத்தாய் மற்றும் மாணவ, மாணவியர் செய்திருந்தனர்.