பாஜக வேட்பாளர் தணிகைவேல் 
TNadu

ரூ.28 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் - பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு : திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் உட்பட 2 பேர் தலைமறைவு; இருவர் கைது

செய்திப்பிரிவு

திருவண்ணாமலையில் பாஜக மாவட்ட நிர்வாகி வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய புகாரில் பாஜக வேட்பாளர் தணிகைவேல் உட்பட 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் பாஜக இளைஞர் அணி நிர்வாகி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை ரமணா நகர் 3-வது வீதியில் வசிப்பவர் ஆனந்தன்(43). இவர், திருவண்ணாமலை மாவட்ட பாஜக துணைத் தலைவராக உள்ளார். இவருக்கும், திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளரும் மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவருமான தணிகைவேலுவுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில் ஆனந்தன் வீட்டுக்கு பாஜக இளைஞரணி மாவட்டச் செயலாளர் அஜித்குமார்(26), பாஜக பிரமுகர் சதீஷ்குமார்(23), தாமரை நகரில் வசிக்கும் பாபு என்கிற சதீஷ்குமார் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளனர்.

அங்கு, ஆனந்தனை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், பெட்ரோல் குண்டு ஒன்றையும் வீட்டின் முன்பு வீசியுள்ளனர். அதில், அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வெடித்து சிதறவில்லை. இதனால், ஆனந்தன் காயமின்றி உயிர் தப்பினார். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து, ஆனந்தன் அளித்த புகாரின்பேரில், அஜித்குமார், சதீஷ்குமார், பாபு என்கிற சதீஷ் குமார் மற்றும் பாஜக வேட்பாளர் தணிகைவேல் ஆகியோர் மீது கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அஜித்குமார் மற்றும் சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள பாஜக வேட்பாளர் தணிகைவேல் உட்பட 2 பேரை தேடி வருகின்றனர்.

கட்சிரீதியாக ஏற்பட்ட நட்பு காரணமாக தணிகைவேலுவுக்கு ஆனந்தன் ரூ.28 லட்சம் வரை கடன் கொடுத்துள்ளார். அந்த பணத்தை தேர்தலுக்குப் பிறகு தருவதாக கூறிய தணிகைவேல், அதன்படி கொடுக்கவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டதால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT