கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று (25-ம் தேதி) முழு ஊரடங்கு அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, இறைச்சிக் கடை உள்ளிட்ட அனைத்து கடை, வணிக வளாகம், தியேட்டர் உள்ளிட்டவைகள் மூடப்படுகிறது. அதே நேரத்தில் மக்களின் பயன் பாட்டுக்காக காய்கறி, பழங்கள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்க்குகள், உழவர் சந்தைகள் வழக்கம்போல இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, சேலம் அம்மாப்பேட்டை, தாத காப்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள 11 உழவர் சந்தைகள் வழக்கம்போல இயங்கும்.
பொதுமக்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் காய்கறிகளை வாங்கிச் செல்ல சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.