தமிழகத்தில் இன்று(ஏப்.25) முழு ஊரடங்கு என்பதால், திருச்சி மாநகரில் இறைச்சி, காய்கனி மார்க்கெட்டுகள் மற்றும் பலசரக்குக் கடைகளில் நேற்று சமூக இடை வெளியைக் கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் குவிந்தனர்.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏப்.20-ம் தேதி முதல் இரவு நேர பொது ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால், காய்கனிகள், இறைச்சி, பல சரக்குகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க நேற்று அதிகாலை முதலே மக்கள் மார்க்கெட்டுகள் மற்றும் பலசரக்குக் கடைகளில் குவிந்தனர்.
குறிப்பாக, காந்தி மார்க்கெட், உறையூர் காசிவிளங்கி மீன் மார்க்கெட், பெரிய கடைவீதி ஆகிய இடங்களில் காய்கறி கள், இறைச்சி, மளிகை பொருட்கள் வாங்க கரோனா பரவல் அச்சம் இன்றி, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதில், பலரும் முகக்கவசம் அணி யாமல் இருந்தனர். அவர்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் அப ராதம் விதித்தனர்.
மக்களின் அலட்சியம் கார ணமாக கரோனா அதிகளவில் பரவும் அபாயம் உள்ளதாகவும், உரிய நடவடிக்கையை மாநகராட்சி எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி உதவி ஆணையர்கள் சுப.கமலக் கண்ணன் (அரியமங்கலம்), ஆர்.வினோத் (கோ-அபிஷேகபுரம்) ஆகியோர் கூறியது: கரோனா பரவலைத் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். ஆனால், பலரும் கரோனா குறித்த அச்சம் இல்லாமல் சுற்றுவது வேதனை அளிக்கிறது என்றனர்.