திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் கோயில் பூசாரி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம்
நடத்தவுள்ளதாக வந்த தகவலையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பாளையங்கோட்டை அழகுமுத்துக்கோன் சிலையருகே போலீஸார் குவிக்கப்பட்டனர்.
சீவலப்பேரியில் கோயில் பூசாரி சிதம்பரம் என்ற துரை முன்விரோதத்தில் கடந்த 18-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பூசாரி குடும்பத்துக்கு நிவாரணம்வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்கமறுத்து அவர்களது உறவினர்களும், சமுதாய அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், பாளையங்கோட்டையிலுள்ள அழகுமுத்துகோன் சிலையரு கிலும் போராட்டம் நடத்த அவர்கள் வரவுள்ளதாக நேற்று தகவல் பரவியது. இதையடுத்து இப்பகுதிகளில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆட்சியர் அலுவலக பிரதான நுழை வாயில் வழியாக வந்த ஊழியர்களை தெற்குபகுதியிலுள்ள வாயில் வழியாகச் செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். பாளையங் கோட்டையில் போலீஸாருடன் அதிரடிப்படையினரும் நிறுத்தப் பட்டிருந்தனர். ஆனால், போராட்டம் நடத்த யாரும் வராததையடுத்து அரைமணி நேரத்துக்குப்பின் போலீஸார் திரும்பிச் சென்றனர்.
பூசாரி கொலையில் மேலும் 3 பேர் கைது
சீவலப்பேரி சுடலை மாடசுவாமி கோயில் பூசாரி சிதம்பரம் என்ற துரை(41) கொலை தொடர்பாக சீவலப்பேரி போலீஸார் இதுவரை 7 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் சீவலப்பேரி தேரடித் தெருவைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் இளங்காமணி (42), காலனி தெருவைச் சேர்ந்த மணி மகன் சேகர் (40), செல்லத்துரை மகன் பேச்சிகுட்டி (42) ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.