உரங்களை கூடுதல் விலைக்குவிற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா.கஜேந்திர பாண்டியன் எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் 3,429.61 மெட்ரிக் டன் யூரியா,415.989 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1,055.63 மெட்ரிக் டன் பொட்டாஷ், 2,035.584 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் என்று மொத்தம் 6,936.81 மெட்ரிக் டன் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
2020-2021 ம் ஆண்டு விலையிலேயே 2021-2022ம் ஆண்டுக்கான டி.ஏ.பி, பொட்டாஷ், சூப்பர்பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என மத்திய உரத்துறை தெரிவித்துள்ளது. உரங்களை கூடுதல்விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாடு சட்டம் 1985-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உர விற்பனையாளர்கள் உர உரிமத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டும் உரம் கொள்முதல் செய்ய வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். உரம் வாங்குபவருக்கு உரிய ரசீது வழங்க வேண்டும்.
உரம் வாங்க செல்லும்போது விவசாயிகள் அரசு அறிவித்துள்ள படி கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
அதிகாரிகளின் திடீர் ஆய்வின்போது வழிமுறைகளை பின்பற்றாமல் இருந்தாலோ, கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தாலோ, ஆவணமின்றி உர விற்பனையில் ஈடுபட்டாலோ உரக்கட்டுப்பாடு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.