திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் அதிகாலை விஸ்வரூப தீபாராதனை முடிந்ததும், பக்தர்களுக்கு இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. இக்கோயிலில் வழங்கப்படும் இலை விபூதி பிரசாதம் தான் ஆதிசங்கரர் நோய் தீர்த்தது எனக் கூறப்படுகிறது. இதனால் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இலை விபூதி வாங்க ஆர்வப்படுகின்றனர்.
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த பக்தர் ராமபூபதி என்பவர் விபூதி பாக்கெட் போடும் இயந்திரத்தை கோயிலுக்கு உபயமாக வழங்கியுள்ளார். இதையடுத்து கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு வெளியே செல்லும் பக்தர்களுக்கு செப்பு கொடிமரம் அருகே சிறிய விபூதி பாக்கெட் வழங்கும் பணி நேற்றுமுன்தினம் தொடங்கியது. திருநெல்வேலி மண்டல இணை ஆணையர்
எஸ்.செல்வராஜ் விபூதி வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். உதவி ஆணையர் செல்வராஜ், உள்துறை கண்காணிப்பாளர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.