விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழந்தார்.
சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டியைச் சேர்ந்த தேசிங்குராஜ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை வச்சக்காரப்பட்டி அருகே உள்ள சதானந்தபுரத்தில் இயங்கி வருகிறது.
இந்த ஆலையில் நேற்று முன்தினம் பிற்பகல் பட்டாசு தயாரிக்கும் போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த அறையில் பணியாற்றிய ஆனையூரைச் சேர்ந்த பாண்டி என்பவரது மனைவி ஆதிலட்சுமி (34) 100 சதவீதத் தீக்காயமடைந்தார். மேலும் ஆனையூரைச் சேர்ந்த ராமர் மனைவி செந்தி (35), ராமச்சந்திரன் மனைவி முத்துமாரி (37), அய்யம்பட்டியைச் சேர்ந்த சுந்தரபாண்டி (40) ஆகியோர் 70 சதவீத தீக்காயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆதிலட்சுமி உயிரிழந்தார். மற்ற மூவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.