மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு படகுகளை சீரமைக்க வட்டியில்லா கடன், தொழில் இல்லாத மீனவர்களுக்கு நிவாரண நிதி, மளிகைப் பொருட்களை அரசு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர் சங்கம் மற்றும் தமிழ்நாடு மீனவர் பேரவை நிர்வாகிகள் கூட்டம், தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுச் செயலாளர் தாஜூதீன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் ராஜமாணிக்கம், பொறுப்பாளர் வடுகநாதன், புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் சின்ன அடைக்கலம், ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் ஜேசுராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகளால் உயர்த்தப்பட்ட டீசல் விலையால், கடந்த ஓராண்டாக மீனவர்களுக்கு மிகப்பெரிய அளவில் தொழில் நஷ்டம் ஏற்பட்டு, பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மீனவர்களுக்கு வரியில்லாத டீசலை வழங்க வேண்டும்.
ஏப்.15-ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் வருகிறது. கடந்த ஆண்டு கரோனா தொற்றால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது. இதனால், கரையிலேயே பல நாட்களாக படகுகள் நிறுத்தப்பட்டிருந்ததால் சேதமடைந்தன. அதிலிருந்து மீண்டு, கடலுக்குச் சென்றுவரும் நிலையில், நிகழாண்டு தடைக்காலத்தை 60 நாட்களிலிருந்து 45 நாட்களாக குறைத்து, அந்த தடைக்காலத்தை அக்டோபர், நவம்பர் மாதங்களில் அறிவிக்க வேண்டும்.
மேலும், மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு படகுகளை சீரமைக்க வட்டியில்லாத கடன், தொழில் இல்லாத மீனவர்களுக்கு நிவாரண நிதி, மளிகைப் பொருட்களை வழங்க வேண்டும்.
ஆண்டுதோறும் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் தொழிலுக்குச் சென்று பிடித்து வரும் இறால், மீன்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. எனவே, கடல் பொருள் ஏற்றுமதி ஆணையம் மற்றும் ஏற்றுமதியாளர்கள், மீனவர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, பேச்சுவார்த்தை நடத்தி உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.