திருப்பூர் மாநகர் தெற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் எம்.ஜி.புதூர் சாலையில், கடந்த மாதம் 10-ம் தேதி கத்தியைக் காட்டி பணம், அலைபேசி பறிக்கப்பட்ட வழக்கில், தாராபுரம் சாலை குப்புசாமிபுரம் இரண்டாவது வீதியைச் சேர்ந்த பிரகாஷ் (25) என்பவரை, போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர், பொதுமக்கள் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரகாஷிடம் நேற்று வழங்கப்பட்டது. இவர் மீது அனுப்பர்பாளையம் காவல் நிலையப் பகுதியில் ஒரு கொலை வழக்கு, வடக்கு காவல் நிலையப் பகுதியில் திருட்டு வழக்கு, தெற்கு காவல் நிலையப் பகுதியில் 3 திருட்டு வழக்குகளும், திருப்பூர் ரயில்வே காவல் நிலையப் பகுதியில் ஒரு திருட்டு வழக்கும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாநகரில் நடப்பு ஆண்டு இதுவரை 14 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.