தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு முகாம்நடைபெற்றது. குரூஸ் பர்னாந்துசிலை சந்திப்பு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார்கலந்துகொண்டு ஆட்டோ ஓட்டுநர்கள், இருசக்கர வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் வழங்கினார்.
செய்தியாளர்களிடம் எஸ்பி கூறியதாவது: தூத்துக்குடியில் மிகக் குறைந்த அளவில் கரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில், தற்போது நாளொன்றுக்கு 50 பேர் பாதிக்கப்படுகின்றனர். வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். முகக்கவசம் அணிவதன் மூலம் 90 சதவீதம் நோய்பரவலை தடுக்கலாம். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர் பருக வேண்டும். அனைவரும் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்கள் மீது சட்டப்படிநடவடிக்கை எடுக்கப்படும்.முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிப்பது உள்ளிட்ட சில அறிவுறுத்தல்கள் அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளன.எனவே, பொதுமக்கள் அனைவரும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பாதுகாப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம் காவல்நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில் சுரேஷ் மற்றும்உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.