சேலம் அருகே மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த மகனை வெட்டிக் கொன்ற தந்தையை போலீஸார் கைதுசெய்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குட்டப்பட்டி எல்லை குட்டையைச் சேர்ந்த விவசாயி மணி (65). இவரது மனைவி மாது. கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இவர்களது மகன் கலையரசன் (38). கலையரசன் மனைவி இளமதி. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளமதி மூன்று குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால், கலையரசன் தந்தை மணியுடன் வசித்து வந்தார்.
கலையரசனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. கலையரசன் தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கலையரசன் தந்தையிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் வீட்டு முன்புறம் தூங்கி கொண்டிருந்த கலையரசனை அவரது தந்தை வெட்டிக் கொலை செய்தார்.தகவல் அறிந்து வந்த நங்கவள்ளி போலீஸார் கலையரசன் உடலை கைப்பற்றி, பிரேதபரிசோனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகனை வெட்டி கொன்ற வழக்கில் மணியை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.