சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரேநாளில் 27 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை 48 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தவிர குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்படி 1,523 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலின் போது பிரச்சினையில் ஈடுபடக்கூடியவர்கள் என 313 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 12 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகளிலும் காவல்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 27 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயக முறைப்படி எவ்வித அச்சமுமின்றி நேர்மையான முறையில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.