தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் உள்ள முதியவரின் வீட்டுக்கு சென்று தபால் வாக்கை பெறும் பணியில் ஈடுபட்ட தேர்தல் சிறப்புக் குழுவினர். படம்: என்.ராஜேஷ் 
Regional03

தூத்துக்குடி மாவட்டத்தில் - முதியோரின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்கு பெறும் பணி தொடக்கம் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்கு பெறும் பணி நேற்று தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 45 ஆயிரம் பேர் தபால்வாக்களிக்க தகுதியுடையவர்களாக இருந்த போதும், 3,503 பேர் மட்டுமே தபால் வாக்கு போட விருப்பம் தெரிவித்து 12 டி படிவத்தை பெற்று நிரப்பிக் கொடுத்தனர்.

இவர்களிடம் தபால் வாக்குகளை பெறும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக மாவட்டம் முழுவதும் 39 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் துணை வட்டாட்சியர் நிலையிலான மண்டல அலுவலர், மத்திய அரசு அலுவலரான நுண் பார்வையாளர், வாக்குச்சாவடி நிலை அலுவலர், காவல் துறையை சேர்ந்த ஒருவர், வீடியோ கிராபர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் அந்தந்த தொகுதிக்கான வாக்குச்சீட்டுகளை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு கொண்டு சென்றனர். வாக்களர்களின் விவரங்களை சரி பார்த்த பிறகு, அவர்களிடம் வாக்குச் சீட்டு கொடுக்கப்பட்டு, ரகசியமான இடத்தில் வைத்து அவர்கள் தங்கள் வாக்கை செலுத்தினர்.

பின்னர் வாக்குச்சீட்டை உறையில் போட்டு ஒட்டி அதனை அதிகாரிகள் குழுவினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மற்றொரு உறையில் அந்த தபால் வாக்கைப் போட்டு சீல் வைத்து, கையோடு எடுத்துச் சென்ற பெட்டியில் போட்டனர். இப்பணிகளை வேட்பாளர்களின் முகவர்கள் குறிப்பிட்ட தொலைவில் இருந்து கண்காணித்தனர்.

இவ்வாறு 6 தொகுதிகளிலும் வீடு, வீடாகச் சென்று தபால் வாக்குகளை பெற்றனர். இந்தப்பணி வரும் 31-ம் தேதி வரை நடைபெறும். தபால் வாக்குகள் அடங்கிய பெட்டிகளை வரும் மே 2 -ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை, அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பில் வைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT