சேலம் மாநகராட்சி சார்பில் மணியனூரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கரோனா பாதுகாப்பு மையதை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். உடன் மாநகர நல அலுவலர் பார்த்திபன். 
Regional03

சேலம் மணியனூரில் 110 படுக்கை வசதியுடன் - தற்காலிக கரோனா பாதுகாப்பு மையம் :

செய்திப்பிரிவு

சேலம் மணியனூரில் கரோனா அறிகுறி உள்ளவர்கள், குறைந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிக கரோனா பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று தற்போது சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சேலம் மாநகராட்சிப் பகுதியில், முன்னேற்பாடு நட வடிக்கையாக மணியனூரில் உள்ள சேலம் சட்டக்கல்லூரி வளாகத்தில், தற்காலிகமாக கரோனா பாதுகாப்பு மையம் நேற்று திறக்கப்பட்டது.

இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் திருமண மண்டபங்கள், உணவகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் முகக்கவசம் அணிவதும் சமூக இடைவெளி கடைபிடிப்பதும், கரோனா தொற்று பரிசோதனை செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு வழிக்காட்டு நெறிமுறைகளை மீறுபவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் சேலம் மாநகராட்சியில் சுகாதார அலுவலர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக, சேலம் மணியனூரில் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் தற்காலிக கரோனா பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் 110 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

கரோனா அறிகுறி உள்ளவர்கள், குறைந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இம்மையத்தில் சிகிச்சை வழங்கப்படும்.

கூடுதல் மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக் கப்பட்டு சிகிச்சை வழங்கப்படும்.தற்காலிக கரோனா பாதுகாப்பு மையத்தில், அவ்வப்போது கிருமிநாசினி மருந்து தெளிக்கவும், சுகாதார பணிகளை மேற்கொள்ளவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, மாநகர நல அலுவலர் பார்த்திபன், மருத்துவ அலுவலர் ரேவதி, சுகாதார ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT