கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறையில் வழங்கும் பணி, தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங் களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறையில் வழங்கும் பணி நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். மாவட்ட தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் பால்சனா, பார்த்தசாரதி சென்ஷர்மா, ஹன்ஸ்ராஜ் சுஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைத்து அரசியல் கட்சிகளின் இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு வழங்கும் பணியை, மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏற்கெனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், இணையதளம் வாயிலாக சுழற்சி முறையில் 2 கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளன. இவை, அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு, இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன,’’ என்றார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
2 சதவீதம் கூடுதல்
5 தொகுதிகளுக்கு 400 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஓசூர் சட்டப்பேரவை தொகுதியில் 18 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கூடுதலாக 666 வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.