சேலம் ராமகிருஷ்ண மிஷன் தர்ம வைத்திய சாலையில், நோயாளிகளை கடவுளாக பூஜிக்கும், ‘ரோகி நாராயண பூஜை’ நடந்தது.
சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமம் சார்பில் செயல்பட்டு வரும் ராமகிருஷ்ண மிஷன் தர்ம வைத்தியசாலையில், ‘ஜீவ சேவையே சிவ சேவை’ என்ற சுவாமி விவேகானந்தரின் கூற்றுப்படி, நோயாளிகளை இறைவனாக கருதி சேவை செய்யும் பொருட்டு, நோயாளிகள் 30 பேருக்கு மாலை அணிவித்து, அவர்களுக்கு ரோகி நாராயணர் பூஜை நடந்தது.
இந்நிகழ்ச்சியில், 30 ரோகி நாராயணர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான புத்தாடை, தட்டு, டம்ளர், மருந்துகள் மற்றும் பிரசாதம் ஆகியவற்றை ஆசிரம செயலாளர் சுவாமி யதாத்மானந்தர் வழங்கி கவுரவித்தார்.
மேலும், சுமார் 150 ரோகி நாராயணர்களுக்கு 15 நாட்களுக்குரிய மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டன.
நிகழ்வின்போது, கரோனா பெறுந்தொற்று காலகட்டத்தில் தர்ம வைத்தியசாலையில் தன்னலம் கருதாது சிறப்பாக சேவை செய்த மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் ஆகியோரும் நினைவுபரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இப்புனித பணிக்கு நன்கொடை வழங்கிய ஆசிரமத்தினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.