Regional03

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர கோரிக்கை :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரக்கோரி ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரியில் அனைத்து வாகன ஓட்டுநர்கள் வாழ்வுடமை சங்கம் சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாழ்வாதாரம் இழந்த ஓட்டுநர்களுக்கு ஆதர வாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ராயல்பாரூக்தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாநிலத் தலைவர் ஜேசுதாஸ் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், ஓட்டுநர் களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப, எங்களது வாகனங்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை விலைப்பட்டியல் மாற்றி அமைக்க வழிவகை செய்ய வேண்டும். கரோனா காலத்தில் இயங்காமல் இருந்த ஆட்டோ, வாடகை கார், மேக்சி கேப் உள்ளிட்ட வாகனங்களுக்கு 6 மாத கால காப்பீட்டு அவகாசம் நீட்டிப்பு செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். இதனை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர வேண்டும். 30 சதவீதம் வாடகை உயர்வை லாரி உரிமையாளர்களுக்கு உடனே நடைமுறைப்படுத்திட வேண்டும்.

விபத்தில் உயிரிழக்கும் ஓட்டுநர்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்கள் எழுப்பினர்.

SCROLL FOR NEXT