கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு பயணிகளின் வசதிக்காக கோவையில் இருந்து பழனி, மதுரை, திருச்சி, சேலத்துக்கு அரசு குளிர்சாதனப் பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கோடை காலம் நெருங்கவுள்ள நிலையில், வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஏசி பேருந்துகளின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:
வெயிலின் தாக்கத்தாலும், சாதாரண பேருந்தைக் காட்டிலும் பெரிய அளவில் கட்டண வேறுபாடு இல்லாததாலும் ஏசி பேருந்தில் மக்கள் விரும்பி பயணிக்கின்றனர். கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து உக்கடம் வழியாக பழனிக்கு இரு ஏசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல, உக்கடத்தில் இருந்தும் பழனிக்கு ஏசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேட்டுப்பாளையம்-பழனிக்கு ரூ.166-ம்,உக்கடம்-பழனிக்கு ரூ.121-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதேபோல, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சிக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிங்காநல் லூர்-மதுரைக்கு ரூ.235-ம், சிங்காநல்லூர்-திருச்சிக்கு ரூ.225-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கோவை காந்திபுரம் புறநகர்ப் பேருந்து நிலையத்தில் இருந்து சேலத்துக்கு இயக்கப்படும் ஏசி பேருந்தில் ரூ.190 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.