சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில் வேட்பாளர்கள் முழுமையாக அறிவிக்கப்பட்ட நிலையில், பத்மநாபபுரம் தொகுதியில் மட்டும் இழுபறி நீடிக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில், 2016 தேர்தலில் தலா 3 தொகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வெற்றிபெற்றன. தற்போதும், அதே தொகுதிகளில் இக்கட்சிகள் போட்டியிடுகின்றன. திமுக எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ் ஆகியோர் முறையே மீண்டும் நாகர்கோவில், கன்னியாகுமரி, பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
அதிமுக கூட்டணியில் நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு ஆகியவை பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டன. கிள்ளியூர் தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டு முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸின் மகன் ஜூட் தேவ் அங்கு போட்டியிடுகிறார். அதிமுக தரப்பில் கன்னியாகுமரி தொகுதியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் போட்டியிடுகிறார். ஆனால், பத்மநாபபுரம் தொகுதிஅதிமுக கூட்டணியில் எந்தக்கட்சிக்கும் ஒதுக்கப்படாமல் நிலுவையிலுள்ளது. இதனால், குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.
குமரி மாவட்டத்தில், அதிமுக தனது செல்வாக்கை உயர்த்த கடந்த 5 ஆண்டுகளாக பல நலத்திட்டங்களை செயல்படுத்தியது. எனவே, குறைந்தது 3 தொகுதியிலாவது அதிமுக போட்டியிட வேண்டும் என உள்ளூர் நிர்வாகிகள் வலியுறுத்தினர். ஆனால், ஒரு தொகுதியில் மட்டுமே அக்கட்சி போட்டியிடுவதால் கட்சியினர் ஏமாற்றமடைந்தனர். இதனால், குமரியில் அதிமுக மேலும் சரிவை சந்திக்கும் என, அக்கட்சியினர் அதிருப்தியடைந்தனர்.
பத்மநாபபுரம் தொகுதியில் திமுக எம்எல்ஏ மனோதங்கராஜை எதிர்த்து, அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளர் ஜான்தங்கத்தை வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தி, தளவாய் சுந்தரம், ஜான்தங்கம் மற்றும் அதிமுகவினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.