Regional01

மின் நுகர்வு அதிகரிப்பால் - மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 1,440 மெகா வாட் உற்பத்தி தொடக்கம் :

செய்திப்பிரிவு

கோடை காரணமாக மின் நுகர்வு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் முழு மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகா வாட் மின் உற்பத்தியைக் கொண்ட 4 அலகுகள், 600 மெகா வாட் மின் உற்பத்தி கொண்ட ஒரு அலகுகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.

கடந்த சில மாதங்களாக பருவமழை, குளிர் காலம் என காலநிலை மாற்றங்கள் இருந்ததால், வீடுகள் மற்றும் விவசாயத்துக்கு மின் நுகர்வு குறைவாக இருந்தது. இதனால், அனல் மின் நிலையத்தில் சில அலகுகள் மட்டும் இயக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்றன.

தற்போது, கோடைகாலம் தொடங்கியதால், மின் நுகர்வு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், அனல் மின் நிலையத்தில் முழு மின் உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனல் மின் நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

கோடைகாலம் தொடங்கியதை அடுத்து, வீடுகள், அலுவலகங்கள் போன்றவற்றில் குளிர்சாதனங்கள், மின் விசிறி பயன்பாடு அதிகரித்துள்ளன. இதேபோல், கிணற்றுப் பாசனம் மூலம் விவசாயப் பணிகள் நடைபெற்று வருவதால், விவசாயத்துக்கும் மின் நுகர்வு அதிகரித்துள்ளது.

கடந்த 27-ம் தேதி வரை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் கொண்ட 4 அலகுகளில் 3 மட்டும் இயக்கப்பட்டு வந்தன. பின்னர் 600 மெகா வாட் அலகிலும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. தற்போது, மின் தேவை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், அனைத்து அலகுகளிலும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தினசரி 1,440 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT