Regional02

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து : 5 பேர் காயம்

செய்திப்பிரிவு

வீட்டில் சமையல் எரிவாயு கசிந்து நிகழ்ந்த தீ விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

திருப்பூர் மாநகர் திருமுருகன் பூண்டி காவல் எல்லைக்கு உட்பட்டபூலுவப்பட்டி அம்மன் நகரைச் சேர்ந்தவர் சரவணன் (42). பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார்.

நேற்று பகல் வீட்டில் சமையல் எரிவாயு இணைக்கப்பட்ட அடுப்பை பற்ற வைக்க முயன்றுள்ளார். ஏற்கெனவே கசிவு இருந்துள்ளதால், அந்த அறை முழுவதும் சமையல் எரிவாயு பரவியுள்ளது. இதை அறியாமல் அடுப்பை பற்ற வைத்தபோது தீப்பற்றியுள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு வெளியில் இருந்த மனைவியின் சகோதரி விஜயா (38) உள்ளே சென்றுள்ளார். அவர் மீதும் தீப்பிடித்துள்ளது. இவர்களை காப்பாற்ற சென்ற விஜயாவின் குழந்தைகள் அஷ்வின் (19), தரணிகா (18), அருகே வசிக்கும் கோகிலா (39) ஆகியோர் மீதும்தீப்பற்றியுள்ளது. நீண்ட நேரப் போராட்டத்துக்கு பிறகு, அருகே வசிப்போர் தீயை அணைத்துள்ளனர்.

அஷ்வின் லேசான காயத்துடனும், மற்ற 4 பேர் பலத்த காயங்களுடனும் மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு திருமுருகன்பூண்டி போலீஸார் சென்று ஆய்வு மேற்கொண்டனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்தின்போது, கடைக்கு சென்றதால் சரவணனின் மனைவி, குழந்தைகள் தப்பியுள்ளனர்.

SCROLL FOR NEXT