TNadu

கரோனா தொற்று காலத்தில் டெட் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பு காலத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு முதல்வர் ஒப்புதல் பெற்று விரைவில் வெளியிடப்படும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆய்வு நடந்து வருகிறது.

பள்ளிகளில் முதல் மற்றும் 3-ம் சனிக்கிழமை விடுமுறை தற்போதைக்கு அளிக்கப்படாது. 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளைத் தொடங்குவது குறித்து மருத்துவத் துறை, கல்வியாளர்கள், பெற்றோரிடம் கருத்து கேட்டு, அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கரோனா பரவல் காலத்தில், ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய டிஆர்பி தேர்வை பலர் எழுத முடியவில்லை. இத்தேர்வை எழுத 45 வயது வரம்பாக உள்ளது. கரோனாவால் இந்த வாய்ப்பை எழுத முடியாத, வயது வரம்பைக் கடந்தவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்குவது குறித்துஆலோசனை நடந்து வருகிறது.

கடந்த 2013, 2014 மற்றும் 2017-ம்ஆண்டுகளில் நடந்த டெட் தேர்வில் 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 48 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எந்தெந்த இடங்களில் பணிகள் காலியாக உள்ளதோ அதற்கேற்ப பணிகள் நிரப்பப்படும் என்றார்.

SCROLL FOR NEXT