Regional03

திருட்டில் ஈடுபட்ட மகனை அடித்துக் கொன்ற தந்தை சரண்

செய்திப்பிரிவு

சேலம் அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட மகனை அடித்துக் கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள மண்ணாதவூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (41). இவரது மனைவி கலைவாணி. இவர்களது மகன் ரசிகரன் (17), அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்குச் செல்லாமல் ரசிகரன் கடந்த இரண்டு ஆண்டாக ஊர் சுற்றிக் கொண்டு, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக புகார் கூறப்பட்டது.

கடந்த வாரம் மேச்சேரியில் நடந்த சைக்கிள் திருட்டு, கோயில் உண்டியல் உடைப்பு சம்பவங்களில் ரசிகரனுக்கு தொடர்பு இருப்பதாக குமாருக்கு தெரியவந்தது. மகன் ரசிகரனை வீட்டில் வைத்து தாக்கியதுடன், சேலையில் தூக்கு மாட்டி தொங்க விட்டார்.

மேலும், மேச்சேரி காவல் நிலையம் சென்ற குமார், தொடர் திருட்டில் மகன் ஈடுபட்டு வந்ததால், அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டதாக சரண் அடைந்தார். சம்பவ இடம் சென்ற மேச்சேரி போலீஸார் வீட்டில் இறந்து கிடந்த ரசிகரன் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக குமாரை போலீஸார் கைது செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT